‘ஆடற்கலை’யாகவும், ‘சதிர்’ஆகவும் புழங்கிய தமிழர் நடனத்தை பரதநாட்டியம் ஆக்கிய உருக்மிணி தேவி அருண்டேல்



பழந்தமிழகத்தில் 'ஆடற்கலை'யாகவும், பிற்காலச் சோழர் காலத்தில் 'சதிர்'ஆகவும் புழங்கிய தமிழர் நடனத்தை தங்கள் இனத்தார் இழிவாகக் கருதியிருந்த நிலையில், அந்த நடனத்தை சிறப்புறக் கற்று, பரதநாட்டியம் என்று பெயர் மாற்றம் செய்து, அதை தங்கள் இனத்தார் பெருமையாகக் கொண்டாடும் கலையாக மாற்றிய பெருமைக்குரியவர் உருக்மிணி தேவி அருண்டேல்!

பிரித்தானிய இந்தியாவில் மதுரை மாநகரில், நூற்றுப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர், உருக்மிணி தேவி அவர்கள்.

இவர் ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞர். கலாசேத்திரா என்ற நடனப் பள்ளியினை நிறுவியவர். பழந்தமிழகத்தில் 'ஆடற்கலை'யாகவும், பிற்காலச் சோழர் காலத்தில் 'சதிர்'ஆகவும் புழங்கிய தமிழர் நடனத்தை தங்கள் இனத்தார் இழிவாகக் கருதியிருந்த நிலையில், அந்த நடனத்தை சிறப்புறக் கற்று, பரதநாட்டியம் என்று பெயர் மாற்றம் செய்து, அதை தங்கள் இனத்தார் பெருமையாகக் கொண்டாடும் கலையாக மாற்றிட முனைப்புடன் செயல்பட்டவர். 

விடுதலை பெற்ற இந்தியாவில், 42 ஆண்டுகளுக்கு முன்பு மொரார்ஜி தேசாய், இவரை இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தப் போது அதை மறுத்தவர் என்கிற சிறப்பு செய்திக்கு உரியவர்.

உருக்மிணி தேவி, நீலகண்ட சாஸ்திரி - சேசம்மாள் இணையருக்கு மகளாவார். உருக்மிணியின் தந்தை நீலகண்ட சாஸ்திரி, அன்னி பெஸண்ட் துவக்கிய தியசோபிக்கல் சொஸைட்டியில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். சாஸ்திரி தனது பணி ஒய்வுக்கு பிறகு அடையாரில், தன் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்.

தியசோபிக்கல் சொஸைட்டியில் நடைபெறும் ஆண்டுவிழாக்களில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. உருக்மிணி, ரவீந்திரநாத் தாகூர் எழுதிய மாலினி என்ற நாடகத்தில் நடித்தார். மேலும் ஒரு பாடலும் பாடினார். இதைப் பார்த்த அவர் தந்தை இசை பயில ஊக்கப்படுத்தினார். உருக்மிணி, கிரேக்க நடனமும் கற்றுக் கொண்டார்.

99 ஆண்டுகளுக்கு முன்பு அன்னிபெசன்ட் அளித்த தேநீர் விருந்தில் ஜார்ஜ் அருண்டேலும், உருக்மிணியும் கலந்து கொண்டனர். இருவரும் ஈர்க்கப்பட்டு, அன்னி பெஸண்ட்டின் அனுமதியோடு, உருக்மிணியின் பதினாறாம் அகவையில் திருமணம் செய்து கொண்டனர்.

இத்திருமணம் அக்கால கட்டத்தில் உருக்மிணியின் உறவினர்களிடையே ஒரு பெரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. உருக்மிணி, ஜார்ஜுடன் ஐரோப்பாவிற்கு பயணம் சென்றார். அங்கு இசை, சிற்பம், ஆப்பரா, பாலே முதலிய பல கலைகளுக்கு அறிமுகமானார். ரஷ்ய நாட்டு பாலே கலைஞரான அன்னா பாவ்லோவாவிடமும், கிளியோ நார்டி என்பவரிடமும், பாலே நடனம் கற்றுக்கொண்டார். 

பாவ்லோவா, இந்திய பாரம்பரிய நடனத்தினையும் கற்குமாறு உருக்மிணியை அன்புடன் கேட்டுக்கொண்டார். பழந்தமிழகத்தில் 'ஆடற்கலை'யாகவும், பிற்காலச் சோழர் காலத்தில் 'சதிர்'ஆகவும் புழங்கிய தமிழர் நடனத்தை அது வரை உருக்மிணி தேவி அறிந்திருக்க வில்லை.

86 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ண அய்யர், சென்னையில் உள்ள மியூசிக் அகாதெமியில், சதிர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதைக் காண உருக்மிணியை அழைத்திருந்தார். சதிர் ஆட்டத்தினால் ஈர்க்கப்பட்டார் உருக்மணி தேவி. அக்கலையினை கற்றுக்கொள்வதற்கு பலதடைகள் எழுந்தாலும், சதிர் ஆட்டத்தினை கற்க வேண்டும் என்று தீர்மானித்தார்.

அக்காலத்தில் புகழ்பெற்ற சதிர் கலைஞர். மயிலாப்பூர் கௌரி அம்மா என்றவரிடம் தனியாகக் கற்க ஆரம்பித்தார். இதற்கு உருக்மிணியின் கணவரான அருண்டேலும், அன்னையும், தமையன்களும் உறுதுணையாக இருந்தனர். முதலில் கௌரி அம்மாவிடமும், பிறகு பந்தநல்லூர் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை என்பவரிடம் நடனம் பயின்றார் உருக்மிணி. 

நாட்டியத்தில் நன்றாக பயிற்சி பெற்று, இந்திய விடுதலைக்கு பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னம், தியசோபிக்கல் சொஸைட்டியின் வைர விழாக் கொண்டாட்டத்தின் போது, அரங்கேற்றம் செய்தார். பலரும் இவருடைய நடனத்தினைப் பாராட்டினர். உருக்மிணியின் நடனம் அழகியல் மற்றும் தெய்வீகத் தன்மை நிறைந்ததாகக் கருதப்பட்டது.

சதிர் நாட்டியம், சமூகத்தில் உள்ள பலரும் பயில வேண்டிய ஒன்று என்பதில் திண்ணமாக இருந்தார், உருக்மிணி. இதற்காக, கலாக்ஷேத்ரா என்ற கலைப் பள்ளியினை தோற்றுவித்தார். இங்குள்ள மாணவர்களுக்கு பயில சிறந்த இசைக்கலைஞர்களையும், நாட்டியக் கலைஞர்களையும் அழைத்தார்.

இந்திய பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருந்த போது, அப்போதைய இந்தியத் தலைமை அமைச்சர் மொரார்ஜி தேசாய், உருக்மிணியை குடியரசுத் தலைவர் பதவியினை வகிக்குமாறு அழைப்பு விடுத்தார். கலை மற்றும் கலை சார்ந்தவற்றிற்காக பணிபுரிவதே தன் விருப்பம் என்று கூறி அப்பதவியினை ஏற்க மறுத்தார். 

உருக்மிணி இறப்பிற்கு பிறகு, அவர் தொடங்கிவைத்த கலாக்ஷேத்ரா தேசிய சிறப்பு வாய்ந்த நிறுவனமாக பாராளுமன்றத்தினால் அறிவிக்கப்பட்டது.

உருக்மிணி, தனது சிறுஅகவையிலேயே, கலைகளில் நாட்டம் கொண்டவராக இருந்தார். ஆனால் அந்தக் காலகட்டத்தில் இளம்பெண்கள், பாட்டு மற்றும் நடனம் கற்றுக்கொள்வது பார்ப்பனிய சமூகத்தில் ஒரு இழுக்காகக் கருதப்பட்டது.

அந்நிலையில் சதிர் என்ற ஆட்டத்தின் அழகியல் தன்மையினை உணர்ந்து, அதன் சிறப்பினை அறிந்து, அக்கலை போற்றி பாதுகாக்கப்பட வேண்டியது என்று நினைத்தார். அதில் சில மாற்றங்கள் கொண்டுவந்தார். பாரம்பரிய சிற்பக் கலைகளின் உதவியாலும், இத்தாலிய உடை நிபுணர் மேடம் காஸன் உதவியாலும் புதுவித உடைகளையும், ஒப்பனையும் செய்தார். அதைப் போலவே, மேடையின் பின்புலத்தினை மாற்றி, பிரோஸினியம் வகையான மேடைதான் நாட்டியத்திற்கு சிறந்தது என்று மேடையினை மாற்றினார். கான்ராட் வோல்ட்ரிங், அலெக்ஸ் எல்மோர், மேரி எல்மோர் போன்ற நாடகக் கலைஞர்களின் உதவியால் மேடையின் ஒளியமைப்பினையும் மாற்றினார். உலகின் சிறந்த அனைத்துக் கலைகளுக்கும் இணையானது இந்தியாவின் சதிர் என்ற அறிந்து, அதற்கு பரதநாட்டியம் என்ற பெயரினை சூட்டினார்.

ஆண்டாள், குற்றாலக் குறவஞ்சி, கண்ணப்பர் குறவஞ்சி, புத்தாவதாரம், குமார சம்பவம், வால்மீகி ராமாயணம் முதலிய நூல்களுக்கு நடனம் அமைத்தார்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாலியல் கல்வி

தீர்க்கவே முடியாது என்ற நோயை கூட தீர்த்து வைக்கும் மந்திரம் எது?

நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம்