இந்த நாட்களில் நல்ல எழுத்துத் திறன் முக்கியத்துவத்தை இழக்கிறதா?


இல்லவேயில்லை!
எழுத்தை கொண்டு வருகிற அமைப்பு முறைகள்தாம் முதன்மைத்துவத்தை இழக்கிறதே அன்றி எழுத்துத் திறன் அல்ல.
இந்தியாவிலேயே அதிகமான கல்வெட்டுக்கள் கிடைப்பது தமிழில் மட்டுந்தாம். இது கல்வெட்டுகளில் எழுத்தைக் கொண்டுவருகிற அமைப்பு முறை.
பனை ஓலைகளில் எழுதத் தொடங்கிய போது கல்வெட்டு எழுத்துமுறை முதன்மைத்துவத்தை இழக்கிறதே அன்றி எழுத்துத் திறன் அல்ல.
பனை ஓலைகளில்தாம் தமிழர்தம் வரலாற்றை நிலைநிறுத்தும் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம், தொல்காப்பியம் அனைத்தும் எழுதப்பட்டன. இது ஓலைகளில் எழுத்தைக் கொண்டு வருகிற அமைப்பு முறை.
அடுத்து தாள்களில் எழுதி அச்சில் புத்தகமாக்கும், எழுத்தை கொண்டு வருகிற அமைப்பு முறை வந்த போது, பனை ஓலை எழுத்துமுறை முதன்மைத்துவத்தை இழக்கிறதே அன்றி எழுத்துத் திறன் அல்ல.
இப்போது செல்பேசிகளில், கணினிகளில் மின் எழுத்துக்காக எழுதிக் கொண்டிருக்கிறோம். தாளில் எழுதி அச்சில் கொண்டுவரும் எழுத்துமுறை முதன்மைத்துவத்தை இழக்கிறதே அன்றி எழுத்துத் திறன் அல்ல. இணையத்தில், சொந்தமாக அமைத்துக் கொண்ட இணையத்தளத்தில் கூகுள் தேடுதளத்தில், முகநூல், கீச்சு, புலனம், படர்வரி, விக்கிபீடியா நமது கோராதமிழ் என அனைத்து சமூக வலைதளங்களிலும் தமிழகத்தின் அனைத்து மனிதர்களும், எழுதி குவித்துக் கொண்டுதானே இருக்கின்றார்கள்.
முன்பெல்லாம்- எடுத்தக்காட்டுக்காக ஒரு இலக்கிய மேற்கோளைக் காட்ட வேண்டும் என்று நினைத்தால், எழுதுவதைத் தற்காலிகமாக நிறுத்தி விட்டு நண்பர்களையும், புத்தகக் கடைகளையும், நூலகங்களையும் தேடி அலைந்து எடுக்க வேண்டும். மீண்டும் எழுதத் தொடங்குவதற்கு மாதக்கணக்கில் கூட ஆகிவிடும். தற்போது அப்படியில்லையே. “நாடாகொன்றோ” என்று ஒரு பாடல் இருக்கிறதே நாட்டைப்பற்றி அது அழகாகச் சொல்லுமே என்று தேட விரும்பினால் தேடுவது மிக எளிது. கூகுளில் தட்டி விரிவாகவே தெரிந்து கொள்ளலாம். 
நாடாகொன்றோ காடாகொன்றோ
அவலாகொன்றோ மிசையாகொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே.
என்ற புறநானூற்றுப்பாடல் ஒளவையார் பாடியது என்று விடை கிடைத்துவிடும்.
இந்த எழுத்துத்திறனில்தான் உலகத்தின் ஒட்டு மொத்த இயக்கமும் நடந்துகொண்டிருக்கிறது. எழுத்துத்திறன் மனித இனம் உள்ளவரை முதன்மைத்துவத்தை இழக்கவே இழக்காது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாலியல் கல்வி

தீர்க்கவே முடியாது என்ற நோயை கூட தீர்த்து வைக்கும் மந்திரம் எது?

நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம்